தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்"
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு, பல்வேறு திட்டங்களின் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. வாரியம் துவக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளை செயல்படுத்தி கொண்டிருந்த நிலையில், 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்ற உயரிய நோக்கத்துடன், குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்களை வாரியம் செயல்படுத்துகிறது.
நோக்கம்
குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 1970 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1971 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சட்டம் இயற்றப்பட்டது.
- 1971 சென்னை நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மனை உரிமம் அற்ற குடிசை மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டது.
- 1977 சென்னையில் மனை உரிமத்துடன் கூடிய குடிசைப்பகுதி மேம்பாடு.
- 1984 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மனை உரிமம் அற்ற குடிசை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் இதர பணிகள் இதர நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
- 1985 பெருமளவிலான ஓடு வீடுகள் அமைக்கும் திட்ட செயலாக்கம்.
- 1987 சென்னை மற்றும் இதர நகரங்களில் மனை உரிமத்துடன் கூடிய குடிசைப்பகுதி மேம்பாடு.
- 1992 நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருவாய் பிரிவினர் / மத்திய தர வருவாய் பிரிவினருக்கு வீடுகள் கட்டுதல்.
- 1995 நிதிக்குழு மான்யங்கள் மற்றும் இதரநிதி ஆதாரங்களுடன் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள்.
- 2008 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவிலான மறுகுடியர்வு திட்டங்களின் துவக்கம்.
- 2012 தொலை நோக்கு திட்டம் 2023 - குடிசைப்பகுதிகளற்ற நகரங்கள்.
- 2015 குடிசைப்பகுதிகளற்ற நகரங்கள் இலக்கை அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்.